Politics

குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாட்டிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் போட்டியிடுவதற்கு “பயந்து ஓடவேண்டாம்” என மோடி கேலி செய்துள்ளதற்கு,

“அப்போது மோடி ஏன் 10 ஆண்டுகளுக்கும் மேல், முதல்வராக இருந்த குஜராத்தில் போட்டியிடாமல், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் போட்டியிடுகிறார்” என்ற கேள்வி வலுக்கத்தொடங்கியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “கடந்த காலங்களில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான மோடி, சுஷ்மா சுவராஜ், வாஜ்பாய் ஆகியோர் கூட தான் 2 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால், ராகுல் காந்தி 2 தொகுதிகளில் மட்டும் விமர்சிக்கப்படுவது எதற்கு?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலட், “மோடிக்கும் வாரணாசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஏன் மோடி குஜராத்தை விட்டு, வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி பயத்திலா?” என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை இளவரசர் என்கின்றனர். நீங்கள் கூறும் இளவரசர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு மக்களின் சிக்கல்களை கேட்டறிந்துள்ளார். ஆனால், உங்களின் அரசர் மோடி, தொலைக்காட்சியில் வரும் போது அவர் முகத்தில் ஒரு எல்லளவு தூசியாவது கண்ணில் படுகிறதா? அவரால் எப்படி மக்களின் சிக்கல்களை அறிந்து கொள்ள முடியும்” என விமர்சித்துள்ளார்.

ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் உதறிவிட்டு, மக்களவைத் தேர்தலுக்கு சற்றும் தொடர்பில்லாத வெறுப்பு பேச்சுகளை முன்மொழிந்து வருகிறார் மோடி.

விமர்சனத்திற்கு பதிலளிக்காமல், இல்லாத சிக்கல்களை புதிதாக உருவாக்கும் மோடி அரசின் இந்த உத்தியை கண்டித்து, பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: “அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!