Politics

மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !

காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா ஓட்டேரியில் உள்ள வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நான்கு கட்ட தேர்தல்கள் இன்னும் நடைபெற உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் தோல்வி பயத்தால் உளறிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் இல்லாத சொத்து வரி, மறுபங்கீடு குறித்து எல்லாம் இருப்பது போன்று பிரதமர் மோடி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக மதரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளில் முக்கியமான ஒன்று. ஆனால் அதை தொடர்ந்து பிரதமர் மோடி மீறி மத அடிப்படையிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது தேர்தல் ஆணையமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாட்டில் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை மோடி அரசின் பொருளாதார கொள்கையின் விளைவாக தற்போது நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி 15 லட்சம் கோடியும் வரிசலுகையாக 11 லட்சம் கோடி என மொத்தம் 26 லட்சம் கோடி சலுகைகளை வழங்கி அதன் மொத்த சுமையை நாட்டு மக்கள் மீது திணித்துள்ளது மோடி அரசாங்கம்.

பாஜக மத ரீதியான அரசியலிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது. சமத்துத்தை வலியுறுத்தும் சோசியலிச கொள்கைக்கு நேர் மாறாக மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள்” என்று கூறினார்.

Also Read: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !