Politics

"28 சதவீத உச்சபட்ச GST வரிவிதிப்பு தேவையா?"- ஒன்றிய பாஜக அரசுக்கு பஜாஜ் நிர்வாக இயக்குனர் கண்டனம் !

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக GST விகிதங்களே வாகனங்களின் விலை உயர்வுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

BS6 போன்ற எரிபொருள் தரநிலைகளை எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச GST தேவையா?இந்தியாவின் GST விகிதங்களை ASEAN மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே வரி வசூலிக்கப்படுகிறது. அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12%-ஆக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். அப்போதுதான் வாகனங்களின் விலை குறையும் அதன் பலன் பொதுமக்களுக்கு செல்லும்"என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் பரவி வருகிறது.

Also Read: வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !