Politics

மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!

தேசிய ஊடகங்களை தன் வசமாக்கி கொண்டு, தான் சொல்வது தான் உண்மை என மோடி சித்தரித்து வந்தாலும், மோடியின் பொய்கள் அடிக்கடி அம்பலப்பட்டு போகிறது.

அவ்வகையில், பொது சொத்துகளை இஸ்லாமியர்கள் எடுத்துக்கொள்வார்கள் என எச்சரிக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தான் அதிகப்படியான பொது சொத்துகளை, முதலாளிகளுக்கு தாரை வார்த்ததையும்,

இடஒதுக்கீட்டை தொட விட மாட்டேன். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அறவே நடக்காது என்று தெரிவிக்கும் மோடி, இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பா.ஜ.க தான் என்பதையும், மறந்துவிட்டது போல பேசி வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் மொழியில் எழுதப்பட்டுள்ளது என மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் மோடி.

எதிர்க்கட்சிகளாலும், சமூக ஆர்வலர்களாலும், உலகளாவிய ஊடகங்களாலும், மோடியின் உதாரணமற்ற வெற்று பேச்சுகள் அம்பலப்பட்டாலும், புதிது புதிதாக தனது வெறுப்பை வெளிக்காட்டி வரும் மோடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “உலகின் அமைதியை ஏற்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது” என்ற சற்றும் பொருளற்ற ஒரு கூற்றை முன்மொழிந்துள்ளார்.

oxford பல்கலைக்கழகம், well being ஆராய்ச்சி மையம், வளங்குன்றா வளர்ச்சிக்குறிக்கோள் அமைப்பு (Sustainable Development Goals Network) இணைந்து நடத்திய உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், முதல் 10 இல்லை, 50 இல்லை, 100 இல்லை. 126 ஆவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன தேசிய ஆணையங்களின் ஆய்வறிக்கைகளே தெரிவிக்கின்றன.

மேலும், பா.ஜ.க ஆட்சியில் இருக்கிற மணிப்பூரில் கலவரம் முடுக்கிவிடப்பட்டு, கலவரம் தொடங்கி, சுமார் 70 நாட்களுக்குள் சுமார் 70,000 மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர். சுமார் 5,000 வீடுகள் தீயில் சாம்பலானது. சிறுபான்மையினர்களின் மத ஆலையங்கள் இடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.

இவை தவிர, தங்களுக்கு குறைந்த ஆதரவு விலை வேண்டும் என அமைதியான முறையில் போராடிய விவசாயிகளை கைது செய்து, வன்முறைக்கும் ஆட்படுத்தியது ஒன்றிய பா.ஜ.க.

ராமல் கோவில் திறப்பு முன்னிட்டு, சிறுபான்மையினருக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததை வேடிக்கை பார்த்தது ஒன்றிய பா.ஜ.க. சொல்ல போனால், வன்முறையை தூண்டியதே பா.ஜ.க தான்.

இப்படிப்பட்ட சூழலை தான் ‘அமைதி’ என்கிறார் மோடி.

இதனையடுத்து, உள்நாட்டில் சிக்கல்களை உருவாக்கினால் போதாது என்று பாகிஸ்தானையும், பொய் பிரச்சாரங்களில் உள்ளிட்டு வருகிறார் மோடி.

இது குறித்து, தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆயிரம் பீரங்கி விட்டாலும் ஆழாக்கு மண்ணு உதிராது - பழமொழி

எத்தனை பொய் பேசினாலும், வெறுப்பு பேசினாலும் இந்தியா மீது பற்று கொண்ட எந்த ஒரு குடிமகனும் பிரதமர் மோடியை இனியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரதமரே இப்படி பேசுவது இந்திய வரலாற்றில் ஓர் கரும்புள்ளி!” என காங்கிரஸை பாகிஸ்த்தானுடன் இணைத்து பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார், “மோடியின் பேச்சில் உண்மையும் இல்லை, நேர்மையும் இல்லை. இது போன்று ஒரு நாட்டின் பிரதமர் பேசுவதை, இதற்கு முன் நான் கண்டதில்லை. அவருக்கு தேவை, எதிர்க்கட்சிகளை குறிவைப்பது மட்டுமே” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு எத்தனை முறை மோடிக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், தனது வெறுப்பு பேச்சுகளை தடையின்றி ஆற்றி வரும் மோடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Also Read: தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!