Politics

எதிர்க்கட்சிகள் தாக்கியதாக நாடகமாடிய பாஜக வேட்பாளர் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி... நடந்தது என்ன ?

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. அதில் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளராக நடிகர் கிருஷ்ணகுமார் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இன்றோடு கேரளாவில் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தாக்குதல் என பாஜக தொடர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் பரப்பத் தொடங்கினர்.

இந்த நிலையில், பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சிகள் தாக்கியதாக கூறிய பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் நாடகம் தற்போது அம்பலமானது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பிரச்சாரத்தின் பொது பாஜக தொண்டர் தெரியாமல் சாவி மூலம் குத்தியதில் அந்த காயம் ஏற்பட்டது அம்பலமானது.

இது குறித்து பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் இந்த செயலை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். எனினும் பாஜக வேட்பாளரின் இந்த செயல் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

Also Read: வெறுப்பு பேச்சுகளில் பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் : அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் !