Politics

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு எதிராக தீர்மானம் : முதல் மாநிலமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு நடத்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

பாஜக தரப்பில் தேர்தல் செலவை குறைப்பதற்கு இந்த நடைமுறையை கொண்டுவருகிறோம் எனக் கூறினாலும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை செயல்படுத்தினால் அதிக செலவு ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.அதனைத் தொடர்ந்து இதனை ஆதரித்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது.

Also Read: தகர்த்தெறியப்பட்ட தடுப்புகள் : டெல்லிக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் - விவரம் என்ன ?