Politics

குறையும் கச்சா எண்ணெய் விலை : "பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கும் திட்டம் இல்லை"- பாஜக அரசு அறிவிப்பு !

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இது தவிர சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மறைமுகமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல் -டீசல் விலையை குறைக்காமல் இருந்து வருகிறது.

கடந்த ஒரு ஆண்டாக ரஷ்யா குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்தாலும் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பொதுமக்களை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்கிடம் செய்தியாளர்கள் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், “தற்போது, விலை நிர்ணயம் செய்யும், பெட்ரோலிய நிறுவனங்களிடம், விலைகுறைப்பு பற்றி, எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: மணிப்பூர் டு மஹாராஷ்டிரா: 6700 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி- வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!