Politics

மோடி செல்பி பாய்ண்டு : RTI கேள்விக்கு பதிலளித்த இரயில்வே அதிகாரி பணியிட மாற்றம்.. பாஜக அரசு அதிரடி !

நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் அமைக்கப்படும் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் குறித்து ஓய்வுபெற்ற இரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரயில்வே வாரியம் பதிலளித்தது.

அதில், GFX ரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்படும் நிரந்தர செல்ஃபி பாய்ண்டுகளுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தற்காலிக செல்ஃபி பாய்ண்டுகளுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன், அம்பாலா, டெல்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் உள்ளிட்ட இரயில் நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படும் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட மற்றோரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் - திருச்சி, தஞ்சை, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட 11 இரயில் நிலையங்களில் பிரதமரின் 3டி செல்பி புகைப்படக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மண்டலத்தில் மட்டும் இவ்வளவு பெரிய தொகை என்றால், நாடு முழுவதும் உள்ள 18 இரயில்வே மண்டலங்களிலும் இத்தைகய செல்ஃபி பாய்ண்ட் வசதி ஏற்படுத்தப்பட்ட எத்தனை கோடிகள் தேவைப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டுவிட்டது.

2022-23 நிதியாண்டில் மட்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச்சலுகை இல்லாததால், ரயில்வே துறைக்கு 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆனால், மக்களுக்கான சலுகைகளை பறித்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு சுய விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படுவது, மக்களின் வரிப்பணத்தை முற்றிலும் வீணடிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியிருந்தார்.

அதோடு மாநிலங்களுக்கான வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான MGNREGA நிதியும் நிலுவையில் உள்ளது, ஆனால் மலிவான தேர்தல் விளம்பரங்களுக்கான மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு தாராளமாக செலவு செய்வதாகவும் கார்கே விமர்சித்திருந்தார்.

மக்கள் வரிப்பணத்தில், பிரதமரும், பாஜகவும் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாகவும், அரசு வளங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு மழை, வெள்ள பேரிடரின்போதும் ஒன்றிய அரசு தேவையான நிதியை ஒதுக்கவில்லை. இதனால் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இதற்கு பதிலளித்த இரயில்வே நிர்வாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செல்பி பூத் குறித்து ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய இரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சிவ்ராஜ் மனஸ்புரே வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டுக்கான இரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதான ‘Ati Vishisht Rail Seva Puraskar’ விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரயில்வே அதிகாரி பணியிட மாற்றம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கிய விவகாரம் : மாஜிஸ்ட்ரேட் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!