Politics

இறைச்சி விற்க தடை, வழிபாட்டு தளங்களில் ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடு -ம.பி பாஜக அரசின் முதல் நடவடிக்கைகள் !

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வில் கடும் இழுபறி நீடித்தது. அம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சௌகான், ஒன்றிய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர், ஜோதிராதித்திய சிந்தியா ஆகியோர் முதல்வர் பதவிக்கு கடுமையாக முயன்று வந்தனர்.

எனினும் முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவை பாஜக மேலிடம் முதலமைச்சராக தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மோகன் யாதவ் புதன்கிழமை தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை திறந்த வெளியில் விற்க தடை விதிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவைத் தாண்டி மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டமும் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் டிஜே அமைப்புகளில் இருந்து ஒலி அளவைக் கண்காணிக்க ஒரு பறக்கும் படை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பாஜகவின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே மதவாதத்தை தூண்டும் விதமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.