Politics

“சர்வாதிகாரம் ஒழிக...!” - நாடாளுமன்றத்தில் அத்துமீறி குண்டு வீசிய மர்ம நபர்கள் : பாஜக MP-க்கு தொடர்பா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று 8-வது நாளாக மக்களவை, மாநிலங்களவையில் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 'சர்வாதிகாரம் ஒழிக.. சர்வாதிகாரம் கூடாது.. மணிப்பூரில் கலவரத்தை நிறுத்து..' என்று கோஷங்களை எழுப்பி முன்னேறிய அவர்களை கண்டு சில எம்.பிக்கள் பயந்து பின்னே செல்ல, சில எம்.பிக்கள் முன்னே வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து மேஜைகளில் குதித்து தப்பியோடினர்.

அப்படியும் விடாமல் அவர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே அவர்கள் வண்ணம் பொருள் அடங்கிய குண்டு ஒன்றை மக்களவைக்குள் வெடிக்க செய்ததால், அங்கே மஞ்சள் நிறத்தில் புகை பரவியது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதும் அவர்கள் 'வந்தே மாதரம்.. பாரத் மாதா கி ஜே..' என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து விசாரிக்கையில் அவர்களுடன் 2 பெண்கள் உட்பட 4 பேர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர்களில் நீலம், அன்மோல் ஷிண்டே என்ற 2 பெண்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களில் 2 பேர் மைசூரையும், 2 பேர் ஹரியானவையும் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தாங்கள் எந்தவித அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய அவர்களுக்கு வழங்கப்படும் Visitor Pass-ல் மைசூர் பா.ஜ.க MP பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதம் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் 2001ம் ஆண்டு குண்டு வீசப்பட்ட அதே நாளான இன்றும் குண்டு வீசும் முயற்சி நடந்திருப்பதாக பாஜகவினர் பிரசாரம் செய்து வரும் நிலையில், அத்துமீறியவர்களின் Visitor Pass-ல் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் கையெழுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் மூடப்பட்டு விட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்தொடரை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய நாடளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் பிரிதிநிதிக்கு பாதுகாப்பு உறுதி செய்ய ஒன்றிய பாஜக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவாக வாக்களித்த இந்தியா : 153 நாடுகள் ஆதரவு !