Politics

National Herald வழக்கு : ரூ.90 கோடி பங்கு முதலீட்டை முடக்கியது அமலாக்கத்துறை - எதிர்கட்சிகள் கண்டனம் !

சுதந்திரத்திற்கு முன்பு 1938-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பத்திரிகை தான் 'National Herald'. காங்கிரஸ் கட்சியின் யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பத்திரிகை மீதான பண மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிவிட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

PMLA என்று சொல்லப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, மற்றும் லக்னோவை தலைமையிடமாக கொண்டு செய்லபடும் இந்த நாளிதழின் வெளியீட்டாளரான AJL-க்கு (Associated Journals Limited) சொந்தமான ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளையும், யங் இந்தியா நிறுவனம் AJL நிறுவனத்தில் வைத்துள்ள ரூ.90.21 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைதள பக்கத்தில், “அமலாக்க இயக்குனரகத்தால் AJL-ன் சொத்துகள் முடக்கப்பட்டதாக வந்துள்ள அறிக்கைகள், நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.கவின் பயத்தை தெளிவாகக் காட்டுகின்றன. 5 மாநிலங்களிலும் தோல்வியை பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, தனது ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த முயற்சியும் தோல்வியடைந்து, தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும்.பா.ஜ.க. ஸ்தாபனத்தால் தேர்தல்களின்போது ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தும் இந்த முறை புதியதல்ல, இப்போது முழு தேசத்தின் முன் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளிதழின் தலையெழுத்தில் பண்டிட் நேருவின் மேற்கோள் நமக்கு நினைவிற்கு வருகிறது - "சுதந்திரம் ஆபத்தில் உள்ளது, அதை உங்கள் முழு பலத்துடன் பாதுகாக்கவும் "நமது ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட இலட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்திய தேசிய காங்கிரசுக்கு இந்த கேடுகெட்ட விளையாட்டின் மூலம் இந்திய மக்களின் ஞானத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், “5 மாநிலத் தேர்தலில் தோற்கப் போவது பாஜகவுக்கு தெரியும். நேஷனல் ஹெரால்டு நாளிதழ் மற்றும் அதனுடன் இணைந்த சொத்துகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினுடையது. இதில் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் தொடர்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்கள், இதை காந்தி குடும்பத்தின் சொத்தாக காட்ட முயல்கிறார்கள். இதனால் பாஜக எதுவும் சாதிக்கப்போவதில்லை !” என்று பேட்டியளித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் சேனா (UBT) எம்.பி சஞ்சய் ராவத், “பாஜகவிலும் பல மோசடி வழக்குகள் உள்ளன; ஆனால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படவில்லை. பாஜகவின் வாஷிங் மெஷினுக்குள் வருபவர்களின் சொத்துக்கு பாதிப்பு ஏற்படாது. நேஷனல் ஹெரால்டு வழக்கு ஒரு அரசியல் வழக்கு. பாஜக எங்கள் குரல்களை அடக்க நினைக்கிறது; ஆனால் இது எளிதானது அல்ல. இது ஆங்கிலேயர் காலத்திலும் நிகழ்ந்தது. இந்த போராட்டம் நாட்டின் ஜனநாயகத்துக்கானது” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Also Read: “4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காலணி & தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி” - அமைச்சர் TRB ராஜா!