Politics

உ.பி-க்கு 13,088 கோடி, தமிழ்நாட்டுக்கு 2,976 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து வெளியான அறிவிப்பு

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியபோது, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை GST இழப்பீட்டு தொகையாக ரூ.9,603 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆனால் நடப்பாண்டில் ரூ.3,533 கோடி வரை மட்டுமே பெற்றுள்ளோம். ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.

பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.

அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று கூறினார்.

இதனை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசுக்கு நிதியளவில் பெரும் பங்களிப்பு செய்தும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு குறைவான அளவே ஒதுக்கப்படுகிறது என Times of India நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஒன்றிய அரசின் நவம்பர் மாத நிதி பங்கீடை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்த நிலையில், இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடியும், பீகாருக்கு ரூ.7,338.44 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடியம், மேற்கு வங்கத்துக்கு ரூ.5,488.88 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பரப்பளவு, மக்கள் தொகை, வரி வருவாய், தனிநபர் வருவாய், காடுகளின் பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப வரிப் பகிர்வு தொகை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், மக்கள் தொகையை மட்டுமே கணக்கீடாக வைத்து ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 46 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் : சட்டப்பேரவையில் வெளியானது பீகார் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு!