Politics

"ஆளுநர்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்"- பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து !

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், பஞ்சாப் அரசும் இதுபோன்ற ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்கள் கொஞ்சமாவது மனசாட்சியின்படி நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறக்கக் கூடாது. ஆளுநர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே மசோதாக்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் இதில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால், அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்"என்று கருத்து தெரிவித்தனர்.

Also Read: பெரியாரின் வார்த்தையே நிலவில் நீர் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது: வைரலாகும் மயில்சாமி அண்ணாதுரை video