Politics

மோடியை மிஞ்சும் பொய்கள் : 2 ஆண்டில் அண்ணாமலை கூறிய அப்பட்டமான பொய்கள்.. இவர் IPS படித்தவர் தானா ?

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்து பாஜக தேசிய அளவில் சொல்லி வரும் பொய்களை தமிழ்நாட்டிலும் சொல்ல ஆரம்பித்தார் அண்ணாமலை. ஆனால், அது வடஇந்தியாவை போல தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவர் பொய் சொன்னது அப்பட்டமாக அம்பலமாகி மாட்டி கொண்டே இருக்கிறார் .

2 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக மேடை ஒன்றில் பேசிய அண்ணாமலை, "1967 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மன்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்" என்று கூறியிருந்தார். ஆனால், அவரின் இந்த பொய்யை அடுத்த சில நிமிடங்களில் தமிழ்நாடு கண்டறிந்தது . 1680 ஆம் ஆண்டு இறந்த சத்ரபதி சிவாஜி மன்னர் 1967 ஆம் ஆண்டு சென்னைக்கு எப்படி வந்தார் என பாஜகவினரை தமிழ்நாடு மக்கள் கிண்டல் செய்தனர்.

கடந்த ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்ப இல்ல.. இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், திமுகவின் முக்கிய தலைவரான ஆற்காடு வீராசாமி அப்போது உயிரோடுதான் இருந்தார்.

பின்னர் EWS பிரிவில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு OBC பிரிவினருக்கும் பொருந்தும் என அப்பட்டமான பொய்யை போகிற போக்கில் அண்ணாமலை கூறிச்சென்றார். ஆனால், முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே அந்த EWS இடஒதுக்கீடு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் 1,80,000 க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை என்று அண்ணாமலை கூறினார். இதிலும் அவர் கூறிய பொய்யை உடனடியாக இணையதளவாசிகள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினர்.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில், இந்தியாவில் 67,802 முதுநிலை இடங்கள் உள்ளன என்பதும் அண்ணாமலை கூறிய ஆண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் இருந்தது பதிவேற்றப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அண்ணாமலையின் வழக்கமான பொய்யை தெரியப்படுத்தினர்.

அதோடு நிற்காத அண்ணாமலை, கடந்த மாதம், கோயம்பத்தூரில் பேசும்போது, "1962 ஆம் ஆண்டு வரை மருதமலை கோயிலில் மின்சாரம் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை திமுக கொள்கையாகக் கொண்டிருந்தது. திமுக சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிரானது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என கூறினார்.

அவரின் இந்த கருத்து அண்ணாமலைக்கு தமிழக வரலாறு சுத்தமாக கிடையாது என்பதை அனைவர்க்கும் உணரவைத்தது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்தது 1967-ம் ஆண்டுதான். 1962 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை காங்கிரஸ் அரசு ஆண்டு வந்தது.

சமீபத்தில் ஈரோட்டில் பாஜக மேடையில் பேசிய அண்ணாமலை, 1931 ல் கடைசியாக ஈரோட்டில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் பாரதியார் பேசினார் என தெரிவித்தார். ஆனால், பாரதியார் 1921-ம் ஆண்டே இறந்துபோனார் என்ற பள்ளி மாணவர்களுக்கு கூட தெரிந்த உண்மை ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு தெரியாமல் போய்விட்டது என இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.

அதற்கு முன்னர் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி பேசிய அண்ணாமலை, எனக்குத் தெரிந்த ஒரே வீரலட்சுமி ஆங்கிலேயர்கள் இருக்கும்போது சாதியை எதிர்த்துப் போராடிய கோவில்பட்டி வீரலட்சுமிதான் என்று கூறினார். ஆனால், கோவில்பட்டி வீரலட்சுமி 1961 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும், ஆங்கிலேயர் 1947-ம் ஆண்டே இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் நாட்டுக்கு சென்று விட்டது அண்ணாமலைக்கு இன்னும் தெரியாமலே இருகிறது போல.

இதை போல ஏராளமான கருத்துக்களை அவர் சொல்வதும், பின்னர் அது பொய் என்றும் அண்ணாமலை தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் முன்னர் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார். இதனை எல்லாம் குறிப்பிட்டு தற்போது பலரும் இவர் உண்மையில் ஐபிஎல் படித்தாரா என்று அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: அதிகரிக்கும் செல்வாக்கு : ம.பி-யில் தனி மெஜாரிட்டியை நோக்கி காங்கிரஸ் - வெளியான கருத்துக்கணிப்பு !