Politics

5 மாநில தேர்தல்: இந்தியா கூட்டணிக்கு சாதகமாகும் கருத்து கணிப்புகள்.. ம.பியில் பாஜகவை வீழ்த்தும் காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar , ஸ்மால் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள 230 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 125 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் பாஜகவுக்கு 104 முதல் 116 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெரும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”அட்டூழியம் மற்றும் ஊழல்களின் ஆய்வகம் மத்திய பிரதேசம்” : பாஜக அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி MP!