Politics

ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் காங்கிரஸ்.. சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல்

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறிதது ஐஏஎன்எஸ்-போல்ஸ்ட்ராட் ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தின.

இதில், வரும் தேர்தலில் காங்கிரஸ் 97-105 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 89-97 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி 2 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று 41 சதவீத வாக்குகளை பெரும் என்றும், பாஜக கடந்த முறையை விட ஒரு சதவீதம் குறைவான வாக்குகளை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியும் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியும் அளித்துள்ளது.

Also Read: துப்பாக்கி முனையில் ராணுவ வீரர் கடத்திக் கொலை.. காவல் நிலையத்தை தாக்கிய கும்பல்.. மணிப்பூரில் அதிர்ச்சி !