Politics

"நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது ?" - விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைத்த அமலாக்கத்துறை !

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.

இதனிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதாடிய கபில் சிபல் "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது என்றும், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும் ?எனக் கூறினார்.

மேலும், வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை, வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து வாதாடிய அவர், நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது என்றும், ஒருவர் மீது வழக்குப்பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் என்னால் சாட்சிகளை கலைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதோடு, இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்ல இயலாது என்று கூறிய அவர், 3,000, 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை.அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்பியூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கின் தீர்ப்பய் செப் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Also Read: அமித்ஷாவுக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால்தானே இந்தியை திணிக்கிறார் - நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் !