Politics

’இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசு தலைவர்’ - இந்தியா பெயரைக் கண்டு அஞ்சும் பாஜக !

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.

அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். அதோடு நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். பாரத் என்ற பெயரை இந்தியா என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் குறியீடாக உள்ளது. அரசியலமைப்பில் இருந்தே அதை நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியா என்ற பெயரைக்கண்டு பாஜகவினர் அஞ்சிவருவது வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் ’இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் விருந்தளிக்கப்படுகிறது.

இதற்காக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் ’இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில், ”அரசியல் சாசனத்தின் 1வது பிரிவில் இடம்பெற்றுள்ள ‘மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா ’ என்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது” என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மேலும், “எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.க அரசு ‘பாரத்’ என்ற பெயரை பயன்படுத்த முயற்சிக்கிறது!” என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் விமர்சித்துள்ளார். இந்த சூழலில் இந்தியா என்ற பெயரையே மாற்ற முயலும் பாஜகவை பொதுமக்கள், சமூக வலைதள வாசிகளும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: ஒரே ஆண்டில் 1000 கோடி சம்பாதித்த பாஜக.. ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 6,046 கோடியாக உயர்வு.. அதிர்ச்சி அறிக்கை