Politics

காலை உணவு திட்டம் குறித்த அருவருக்கத்தக்க கருத்து.. மன்னிப்பு கோராத தினமலர்.. வலுக்கும் கண்டனம் !

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகள் கூடு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் நேற்று தினமலர் நாளிதழ் ஈரோடு - சேலம் பதிப்பின் தலைப்பு செய்தியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் செய்திகள் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் தினமலருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு மக்களிடம் இருந்தும் தினமலருக்கு கண்டனங்கள் குவிந்தது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், தினமலரின் விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டது. அதோடு தினமலரின் இந்த மோசமான செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியான தினமலர் ஈரோடு - சேலம் பதிப்பில் தங்களின் மோசமான செயலுக்கு எந்த மன்னிப்பையும் தினமலர் நாளிதழ் கோராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியான தினமலர் ஈரோடு - சேலம் பதிப்பில் நேற்று தாங்கள் செய்த செயலுக்கு விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தும் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்காத தினமலரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.