Politics

மோடிக்கு வாக்களித்த விரலை வெட்டிய நபர்.. உள்துறை அமைச்சருக்கு அனுப்பியதால் அதிர்ச்சி ! - நடந்தது என்ன ?

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணியுடன் சிவா சேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பால்தான் (Phaltan) என்ற பகுதியில் 43 வயதான தனஞ்சய் நன்வாரே (Dhananjay Nanavare) என்ற நபர் தனது ஆள்காட்டி விரலை வெட்டி அம்மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்தான் பகுதியில் வசித்து வரும் தனஞ்சய் நான்வேருக்கு நந்தகுமார் நன்வாரே (Nandkumar Nanavare) என்ற 45 வயதுடைய சகோதரன் இருந்தார். இவருக்கு திருமணமாகி ஊர்மிளா என்ற மனைவியும், 19,14 வயதில் 2 பிள்ளைகளும் இருக்கும் நிலையில், நந்தகுமார் முன்னாள் எம்எல்ஏ பப்பு கலானியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தார், மேலும் சிவசேனா எம்எல்ஏ பாலாஜி கினிகரிடம் பணியாற்றினார்.

இந்த சூழலில் சகோதரர் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி ஊர்மிளா கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தங்களது வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரித்தனர்.

அப்போது தங்களது இறப்புக்கு காரணம் சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் ஆகியோர் தான் என்று தற்கொலை குறித்த வீடியோ கிடைத்தது. இதையடுத்து இது குறித்து போலீசார் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், தனது சகோதரன் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது அவரது வங்கி கணக்கு விவரம் மூலம் தெரியவந்தது என்றும், எனவே முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் மேலிடத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போதும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் மனமுடைந்த தனஞ்சய், அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும்படி செயல் ஒன்றை செய்தார். மோடி ஆள்காட்டி விரலை வெட்டி அம்மாநில உள்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு (Devendra Fadnavis) அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் அந்த வீடியோவில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தனது உடல் உறுப்புகளின் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பாகங்களையும் வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்புவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு.. கிராம மக்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு !