Politics

ஹரியானா கலவரம் : “இன அழிப்பு நடவடிக்கையை அரசு செய்கிறதா?..” - மாநில அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி !

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடந்து வருகிறது. ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர்.

இந்த பேரணியில் வந்தவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர். இவர்களது பேரணி குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் வந்தபோது, சிலர் தடுத்துள்ளனர். இதையே தங்களுக்குக் கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உடனடியாக மத வன்முறையில் இறங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மக்களை அடித்து துன்புறுத்தியதோடு வாகனங்கள், கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர். மேலும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 2 ஊர்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதில் மசூதியில் இருந்த இமாம் ஒருவரும் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டார். அதோடு 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்ந்து ஒரு சில பகுதிகளுக்கு பரவ தொடங்கவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அங்கே இருக்கும் பாஜக அரசு கலவரத்தை பயன்படுத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை உ.பி அரசை போன்று புல்டோசர் வைத்து இடித்து வருகிறது. கடந்த நான்கு நாள்களில் 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள், 50-க்கும் மேற்பட்ட சிமென்ட் வீடுகளை

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மேலும் மாநில அரசு இதுபோன்ற புல்டோசர் வைத்து இடிக்கும் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்'இன அழிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?' என்று கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து ஹரியானா கலவரம் தொடர்பாக மாநில அரசு விசாரித்து வருவதாகவும், புல்டோசர்கள் அதன் ஒரு பகுதி என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "அதிகாரம் ஊழல் செய்யத் தூண்டுகிறது. முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது" (power tends to corrupt and absolute power corrupts) என்று என்ற ஆங்கில எழுத்தாளர் லார்டு ஆக்‌டனின் வரத்தைகளை மேற்கோள்காட்டிய நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்கள், செய்திகள் வெளியாகியுள்ளதை குறிப்பிட்டு, புல்டோசர்களை வைத்து வீடுகளை இடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து இதுவரை எத்தனை வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவற்றை இடிக்கும் முன் நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்க செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்க மாநில துணை கமிஷனர் திரேந்திரா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹரியானாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளை மீறி 700 பேருடன் இந்துத்துவ கும்பலின் ஆதரவோடு மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் இமாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும். இந்துக்களின் பகுதியில் இருக்கும் மசூதி அகற்றப்படவேண்டும்,இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் எவருக்கும் வாடகைக்கு வீடு அளிக்கக் கூடாது. வேலைகளும் தரக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமாக இந்துத்துவ கும்பலால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த பஞ்சாயத்தில் கூடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மக்களாட்சியின் கறுப்பு நாள்.. "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் EPS-முதலமைச்சர் விமர்சனம் !