Politics

ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது ஏன்? - குஜராத் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி !

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.

இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டடைக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே ராகுல் காந்தி குறித்து தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகள் வருமாறு :

"இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றத்திற்கான தண்டனை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும். அதன்படி ராகுல் காந்தி வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் பிறப்பித்த உத்தரவில், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஆனால், இப்படி அதிகபட்ச தீர்ப்பு வழங்க நீதிபதியால் வேறு எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை. அவருக்கு ஓராண்டு 11 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்.

ஆனால், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது ஏன் ? இந்தத் தண்டனையின் காரணமாக ஒரு தனிநபரின் உரிமை மட்டுமின்றி, ஒரு தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமளவுக்கு தண்டனைக்குரிய காரணம் பொருத்தமானதா? இதற்கு நீதிமன்றமும், மனுதாரருக்கு பதிலளிக்க வேண்டும்.

ராகுல் காந்தி வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் 125 பக்கங்களுக்கு ஒரு அரசியல்வாதி எப்படி நடக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் எதையும் நாங்கள் கருத்தில் கூட எடுத்துக் கொள்ளப் போவதில்லை. குஜராத்தில் இருந்து வரும் சில தீர்ப்புகள் படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது." என தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read: நடுரோட்டில் வாக்குவாதம்.. இளைஞர் மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக MLA மகன்.. ம.பி.யில் தொடரும் சோகம் !