Politics

மணிப்பூர் வன்முறையில் சிக்கி தப்பிய இந்திய அணி வீரரின் குடும்பம்.. மைதானமும் எரிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்திய கால்பந்து அணி வீரர் சிங்லென்சனா சிங் கோன்ஷ் என்ற வீரரின் குடும்பம் வன்முறையில் சிக்கிக்கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," கலவரத்தின்பொது நள்ளிரவு 12:30 மணியளவில் எங்களது வீடு எரிக்கப்படுவதாக என் அம்மா செல்போன் மூலம் என்னிடம் கூறினார்கள்.

அப்போது இதுதான் அம்மாவிடம் பேசும் கடைசி நிமிடமாக இருக்கும் என நினைத்து, அம்மா , பேசுவதை நிறுத்திவிடாதே உன்னுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலேயே அங்கு வெடிக்கும் துப்பாக்கிச் சத்தம் எனக்கு கேட்டது. அங்கு கூக்குரல்களும் எனக்கு கேட்டது. ஆனால், இந்த கலவரத்தில் என் குடும்பத்தினர் உயிர் பிழைத்துவிட்டனர். ஆனால் அங்கு இரவில் என்னால் உறங்கவே முடியவில்லை.

அதன் பின்னர் மணிப்பூர் திரும்பியபோது என் வீடு எரிக்கபட்டதை கண்டேன். அதோடு அங்கு நான் திறமை இருந்தும் பணம் கட்டி பயிற்சிக்குச் செல்ல முடியாத இளைஞர்களுக்காக நான் கட்டிய கால்பந்து மைதானமும் எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நாட்டுக்காக சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால், இந்த வன்முறையால் என் கனவு சிதைந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

Also Read: இறுதி நாளில் மாறிய ஆட்டம்.. வெற்றியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா.. வென்றும் கோப்பையை தவறவிட்ட இங்கிலாந்து!