Politics

"தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்": ஐ.லியோனி குற்றச்சாட்டு!

புதுச்சேரி மங்கலம் தொகுதி திமுக சார்பில்,முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, "உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடக்கூடிய திறமை பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். அவர் பேசுவது எல்லாம் பொய்தான். புதுச்சேரியில் ஆளுநரின் சொல்லுக்குத் தலையாட்டி பொம்மைபோல் முதல்வர் ரங்கசாமி உள்ளார். ஆனால் இவரைப் போல் நான் இருக்க மாட்டேன் என நிரூபித்து வருபவர்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். ஆனால் இவர் தமிழ்நாடு பாடநூலை நீக்கிவிட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி துரோகம் செய்துள்ளார். இவர் ஒரு தமிழினத் துரோகி. இந்த துரோகத்துக்கு முடிவு கட்ட புதுச்சேரியில் தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். என்டிஏ கூட்டணி துரோகிகளின் கூட்டணி. இதற்கு மோடி தான் தலைவர். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் ஆட்சி அமைக்கும்.

அண்ணாமலையை கர்நாடகாவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள். புதுச்சேரியிலும் உதயசூரியன் ஆட்சி அமைத்து திராவிட மாடல் ஆட்சி நடக்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது: முதலமைச்சரின் அழுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!