Politics

எரியும் மணிப்பூர்.. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் ரூ.30 கோடி செலவு செய்த ஒன்றிய அரசு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்குச் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்தாமல் இருப்பது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவுகள் மற்றும் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், "2021 முதல் ஜூன் 2023 வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்காக மொத்தம் ரூ.30 கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்தபோது பிரதமர் மோடி மே19ம் தேதி ஜப்பானுக்கும், மே 22ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கும் பயணம் செய்துள்ளார். பின்னர் மே 25ம் தேதி இந்தியா திரும்பியுள்ளார். பின்னர் ஜூன் 2ம் தேதி அமெரிக்காவிற்கும் எகிப்துக்கும் பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரு MP, MLA இல்லை; ED உருவாக்கிய NDA.. மோடி கூட்டணியின் லட்சணத்தை அம்பலப்படுத்திய முரசொலி!