Politics

கவிழ்கிறதா பாஜக அரசு.. சொந்த கட்சி MLA-க்களின் கடிதத்தால் அதிர்ச்சி ! மணிப்பூர் மாநிலத்தில் பரபரப்பு !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், மாநிலத்தில் பாஜக ஆட்சி நீடிக்கும் நிலையில், அந்த அரசை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.இதனிடையே இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு உற்பட்டது. அந்த துறைக்கு அமித்ஷா அமைச்சராக இருக்கும் நிலையில், இது அமித்ஷாவின் தோல்வி என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் நிர்வாக திறமை உள்ளவர்கள் யாரும் இல்லாத நிலையில், தற்போது அமித்ஷாவின் நிர்வாகதிறன் இல்லாதது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 8 மணிப்பூர் மாநில எம்.எல்.ஏக்கள் மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாஜக அரசால் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும்,இதனால் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். மணிப்பூரில் மொத்தம் உள்ள 23 பாஜக எம்.எல்.ஏக்களில் 8 பேர் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அங்கு எந்நேரமும் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: “9 ஆண்டுகளாக வாயால் வடை சுடும் ஒன்றிய மோடி பாஜக அரசு..” - பட்டியலிட்டு முரசொலி கடும் விமர்சனம் !