Politics

முகலாய அரசர் ஔரங்கசீப் படத்தை Profile Picture-ஆக வைத்த நபர் கைது.. மராட்டிய போலிஸின் செயலால் அதிர்ச்சி!

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த வரிசையில் பாஜக கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் மஹாராஷ்டிராவில், சில நாட்களுக்கு முன்னர் திப்பு சுல்தான், ஔரங்கசீப் ஆகியோரை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைத்திருந்தனர். உடனே இதை கண்ட இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மராட்டிய மன்னர்களை அவமதித்துவிட்டனர் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெரும் வன்முறை வெடித்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பேசிய கருத்து கலவரத்தை மேலும் தீவிரமாக்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது முகலாய அரசர் ஔரங்கசீப் புகைப்படத்தை ப்ரோபைல் போட்டோவாக வைத்த நபரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை பகுதியில் செல்போன் சர்வீஸ் வழங்கும் கடையை நடத்தி வந்துள்ளார். இவர் தனது வாட்ஸ் ஆப் ப்ரோபைல் போட்டோவாக முகலாய அரசர் ஔரங்கசீப் புகைப்படத்தை வைத்துள்ளார்.

இதனை பார்த்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள வாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது 298 மற்றும் 153-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "விவசாயிகளை கொன்ற ஆஷிஷ் மிஸ்ராவைப்போல பிரிஜ் பூசனை விடமாட்டோம்" -மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆவேசம் !