Politics

பாஜகவை விமர்சித்த ஊடகத்துக்கு தடை.. ஒன்றிய அரசை காட்டமாக விமர்சித்து தடை உத்தரவை நீக்கிய உச்சநீதிமன்றம்!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தன்னை எதிர்த்து எழும் எதிர்ப்புகளை கடுமையாக அடக்கிவருகிறது. அதிலும் தனது ஆட்சியை ஊடகங்கள், ஊடகவியலாளர்களை தொடர்ந்து மிரட்டும்வண்ணம் செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் அவலங்களை வெளிகொண்டுவந்த பல்வேறு ஊடகவியலாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மோடி ஆட்சியையும், அதன் அவலங்களையும் மீடியா ஒன் என்ற மலையாள தனியார் ஊடகம் தொடர்ந்து விமர்சித்து வந்தது. மோடி குறித்த பல்வேறு விவகாரங்களை இந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு வந்த நிலையில், இந்த செய்தி நிறுவனத்தை மூடவேண்டும் என பாஜக தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கூறி வந்தனர்.

இதனிடையே ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மீடியா ஒன் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில், ஒன்றிய அரசு உரிமத்தை புதுப்பிக்க மறுத்து அதற்கு தடை விதித்தது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் மீடியா ஒன் நிறுவனம் தேச பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றமும் தடை உத்தரவை உறுதிசெய்தது. ஆனால் இதனை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கேரள உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட தீர்ப்பில், "அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பதால் மட்டுமே ஊடகங்களை முடக்கக் கூடாது. உண்மை பேசுவது ஊடகங்களின் கடமை. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவது வலுவான ஜனநாயகத்துக்கு முக்கியமானது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களையும், அரசுக்கு ஏற்ப சிந்திக்க வைப்பதற்குச் சமமாகும். பல்வேறு விவகாரங்களில் ஒரே மாதிரியான கருத்துகளை வெளியிடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து.அந்தத் தொலைக்காட்சியின் உரிமத்தைப் புதுப்பிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் மறுப்பது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது.

மக்களுக்குச் சட்டம் வழங்கும் தீர்வை மறுப்பதற்கு தேசப் பாதுகாப்பைக் கருவியாக அரசு பயன்படுத்துகிறது.சாதாரண விஷயங்களை வைத்து தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறக் கூடாது. மீடியா ஒன் நிறுவனத்துக்கு எதற்காகத் தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைத் திறந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாமல் சீலிடப்பட்ட உரையில் ஒன்றிய அரசு அளித்தது நீதிக்கு எதிரானது" எனக் கூறியுள்ளனர்.

Also Read: ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம்.. - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை !