Politics

மோடிக்கு நோபல் பரிசா? வதந்தி பரப்பும் கும்பல்.. பொய்யான தகவல் என நோபல் கமிட்டி துணைத் தலைவர் விளக்கம் !

உலகளவில் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு உலகநாடுகளின் அமைதிக்காக போராடும் அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மார்ட்டின் லூத்தர் கிங்கில் இருந்து சோவியத் அதிபர் கோர்பச்சேவ், அமெரிக்க அதிபர் ஒபாமா என பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்தும் கைலாஷ் சத்யார்த்திக்கு கடந்த 2014இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே இந்தியா வந்துள்ள நிலையில் இந்தாண்டுகான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாகவும், உலகில் அமைதியின் நம்பகமான முகமாக மோடி உள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியானது.

மேலும், அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி இருப்பார் என்றும், மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாகவும், வலிமையான நாடாகவும் மாறியுள்ளதாக அவர் கூறியதாக தகவல் வெளியானது. இதை உண்மை என நம்பி பல செய்தி நிறுவனங்களும் இந்த தகவலை வெளியிட்டன.

இந்த நிலையில், இந்த தகவல் தவறானது என்றும் பொய்யான தகவல் எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை என்றும் நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் நார்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவராக இந்தியாவுக்கு வரவில்லை. சர்வதேச அமைதி மற்றும் புரிதலுக்கான இயக்குநராகவும், இந்தியாவின் நண்பராகவும் இங்கு வந்து இருக்கிறேன்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதாக நான் கூறியதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இந்த பொய்யான தகவல் எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவாளர்கள் பரப்பிய பொய் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

Also Read: அமெரிக்காவில் கோடாரியால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகர்.. மர்மநபர் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !