Politics

பத்திரிகையாளர் அவமதிப்பு: “மோடி அப்படி என்றால்.. அண்ணாமலை இப்படி” -காங்கிரஸ் MLA செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அண்ணாமலை, உடனே அவர்களிடம் அநாகரிக முறையில் நடந்துகொண்டார்.

மேலும் அவமரியாதை செய்யும் விதமாக, "யாரு நீ.., நீ எதுக்கு என்கிட்ட கேள்வி கேக்குற.., என்ன சேனல் நீ.. உன் பேரு என்ன.." என அவமரியாதையாக ஒருமையில் பேசினார். இவரது பேச்சு தற்போது தமிழ்நாடு அளவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர் சந்திப்பு என்று அழைத்து தான் ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற நினைவேதுமில்லாமல் மாற்றுக்கட்சியின் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஆதாரமற்ற முறையில் தரம்தாழ்ந்து விமர்சித்துவிட்டு, பின் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் நீ என்ன ஊடகம் என்று தொலைக்காட்சி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களை கீழ்த்தரமாக மிரட்டுவதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு எங்களது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் ஏற்றுக்கொண்ட தலைவர் மோடியோ பத்திரிகையாளர்களை சந்தப்பதில்லை. இவருக்கோ பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதில்லை. இதற்கெதற்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை வைக்கவேண்டும். மோடி மாதிரி தவிர்த்துவிட்டு போய்விடலாமே?

இவர் பேசும் தொனி, உடல்மொழியெல்லாம் இதுவரை எந்த பத்திரிகையாளர்களும் பார்த்திருக்கமாட்டார்கள். இவரின் பேச்சுகள், அரசியல் செய்கிறேன் பேர்வழியென்று இவரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக அநாகரீகமாக இருக்கிறது.

பா.ஜ.க. தலைவர்கள் சொல்வதை அப்படியே எழுதிக் கொண்டு வந்து பிரசுரிக்கவும், செய்தியாக சொல்வதற்கும் பத்திரிகையாளர்கள் ஒன்றும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை. பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டு அதன் உண்மைதன்மையை வெளிக்கொணர்ந்து செய்தியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள். ஆதலால், கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். பதில் இல்லையென்றால், அவர்களை நாகரீகமில்லாமல், தரக்குறைவாக நடத்தக்கூடாது.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை வந்ததிலிருந்து அவர்களின் கட்சிக்குள் கேட்க கூசும் வார்த்தைகயும், அநாகரிகங்களும் அதிகமாகிவிட்டது. இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் கூறாமல் அடாவடித்தனமாக நடப்பது, கூச்சலிடுவது எந்த வகையில் நியாயம். பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் கண்ணியமாக நடத்த பா.ஜ.க.வினரும், அதன் தலைவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதே அணுகுமுறையை இவர்கள் கையாண்டால் பத்திரிகையாளர்கள் இவர்களைசந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: கேள்விக்கு பதிலளிக்காமல் மீடியாக்களை மிரட்டிய அண்ணாமலை.. செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு !