Politics

பள்ளிகளில் சாதி அடையாளக் கயிறுகளை தடை செய்யும் அறிவிப்பை திசை திருப்புகிறார் எச்.ராஜா - திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தன்னுடைய 57வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். தற்போது அவர் இல்லாத காரணத்தால் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் இல்லாத அந்த இடத்தை ஸ்டாலின் நிரப்பியுள்ளார். இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும், பனை விதைகளை விதைப்பது என்கிற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.” என்றார்.

பள்ளிகளில் சாதிக் கயிறுகள் கட்டக் கூடாது என்ற அறிவிப்பு பற்றி தொடர்ந்து பேசிய அவர் “சாதிகள் அடையாளப்படுத்தும் கயிறுகளை மாணவர்கள் கட்ட கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது. மாணவர்கள் சாதி சாயம் இல்லாமல் சுதந்திரமாகப் படிக்க முடியும். எனவே பள்ளிகளில் சாதிகளை அடையாளப்படுத்தும் கயிறுகளைக் கட்டுவதற்கு மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் எச்.ராஜா போன்றவர்கள் இதனை திசை திருப்பும் நோக்கில் பேசி வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கை மூலம் 3, 5 ஆகிய வகுப்புகளிலேயே பொதுத்தேர்வு என்கிற திட்டம் அமலுக்கு வருமானால், மாணவர்கள் பள்ளி படிப்புகளைப் பாதியிலேயே கைவிடும் சூழல் உருவாகும். குல கல்வித்திட்டம், சனாதன கொள்கை ஆகியவற்றைப் புகுத்தவும், இந்தி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலும் தான் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.'' என்று மத்திய பா.ஜ.க அரசின் சூழ்ச்சியை கண்டித்து பேசினார்.