murasoli thalayangam

கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!

பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்கள் எவை எவை என்ற சாதனைகளை மேலும் பார்ப்போம்..

« ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர் கல்வி பயில கட்டணச் சலுகைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 2,974 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

« வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 31 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

« ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக்கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி மாணக்கர்களுக்கு 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் இவ்வரசால் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

« கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என 381 அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் 166 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

« ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் சாலை வசதி, சிறு கட்டுமானப் பணிகள், குடிநீர் வசதி மற்றும் சிறு பாலங்கள் கட்டுதல் முதலிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 4,624 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

« இதேபோல் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் 475 கோடி ரூபாய் செலவில் 25,262 அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

« ‘தாட்கோ’வால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10,466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியம் 2022- 23ஆம் நிதியாண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் துவங்கப்பட்டது.

« 2022 ஆம் ஆண்டு மட்டும் 21 புத்தொழில் நிறுவனங்கள் 28.10 கோடி ரூபாய் பயன்பெற்ற நிலையில் இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023-24ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் 5 பழங்குடியினர் மற்றும் 21 ஆதிதிராவிடர் நிறுவனங்கள் என மொத்தம் 26 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 13 நிறுவனங்கள் மகளிரால் நிர்வகிக்கப்படுபவை.

« ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த புதிய தொழில் தொடங்க, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இவ்வரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

« தூய்மைப் பணியாளர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, 87,327 உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

« பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், பழங்குடியினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளன.

« கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலினத்தில் சேர்த்து - அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2023 ஏப்ரலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

« “சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி (21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்” என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

« நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் இலக்கு வைக்கப்பட்டது.

இவை அனைத்தும் கடந்த 41 மாதத்தில் செய்து தரப்பட்டவை ஆகும். இது பழனிசாமி கண்ணுக்குத் தெரியவில்லை. இவர் கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்று கேட்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ‘தாட்கோ’ மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கி இருந்தது. ‘தாட்கோ’ மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்க பெறப்பட்ட 3,963 விண்ணப்பங்கள் இருப்பில் வைக்கப்பட்டு, இம்மானியத்திற்கான தொகை ரூபாய் 52.01 கோடி விடுவிக்கப்படாமல் வங்கிகளில் நிலுவையில் இருந்தது. இதையும் விடுவித்தது தி.மு.க. ஆட்சிதான்.

தி.மு.க. ஆட்சியில் மொத்தம் ரூ.100 கோடிக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. பழனிசாமிக்கு பதில் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான சில விளக்கங்களைச் சொல்லி இருந்தார். ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியானது இத்துறையால் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2023 - 2024ஆம் ஆண்டில் PMAGY திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூபாய் 186 கோடியும் SCA-Grants in aid திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூபாய் 61 கோடியும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். ஆனால் தவறான தகவல்களைப் பரப்பி அவதூறுகளின் அடையாளமாக மாறி வருகிறார் பழனிசாமி.

“ஆதிதிராவிடர்க்கு நலத்திட்ட உதவி செய்வதோடு எங்கள் அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்” என்பதையும் முதலமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இவற்றுக்கும் பழனிசாமிக்கும் பல மைல் தூரம் ஆகும்.

Also Read: ஷேக் ஹசினாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - வங்கதேச நீதிமன்றம் உத்தரவு !