murasoli thalayangam

ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா மீதான மோசடி புகார்! : தோலுரித்த முரசொலி!

விசாரணை வளையத்தில் பா.ஜ.க!

அவர்களால் வளர்க்கப்பட்ட பூதம், அவர்களையே பழிவாங்கத் தொடங்கி விட்டதன் அடையாளம்தான் பெங்களூரு வழக்கு!

தேர்தல் பத்திரம் என்ற பெயரால் மிரட்டி பணம் வசூலித்ததாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் கர்நாடக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஒருவர் இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருக்கிறார். இன்னொருவர் இந்திய நாட்டை ஆளும் கட்சியின் தேசியத் தலைவர். பெங்களூருவைச் சேர்ந்த ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் என்பவர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்வளாகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல்மாதம் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

“ஒன்றிய பா.ஜ.க. அரசு தேர்தல் நிதியை பத்திரங்கள் மூலமாகக் கொடுப்பது என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக பா.ஜ.க. அதிகமான அளவு நிதியைப் பெற்றுள்ளது. இந்த நிதிகளில் மிரட்டிப் பறிக்கப்பட்டவை அதிகம். எனவே இது பற்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஆதர்ஷ் அய்யர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் ஆதர்ஷ் அய்யர்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. தேசியத் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான நட்டா, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா, கட்சியின் முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெங்- களூரு திலக் நகர் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையும் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் போய் பா.ஜ.க. முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் தடையாணை பெற்றுள்ளார். அது இடைக்காலத் தடைதான். இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப் பிரிவுகள் 384, 120பி, 34 ஆகிய பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றநோக்குடன் சதி செய்தல், மிரட்டி பணம் பறித்தல், கூட்டுச் சேர்ந்து குற்றம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஆகியோர் டெல்லியில் அளித்த பேட்டியில்,“கடந்த 11 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு வழக்குகளை மத்திய அமைப்புகள் பதிவு செய்துள்ளன. எனவே நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை எப்படி கையாள வேண்டும் என்று அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டியது இல்லை.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் ஒன்றிய அரசின் தலையீடு இல்லாததை உச்சநீதிமன்- றமும், உயர்நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புதிதல்ல. அரசியல் களத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்தான். பொது வெளியில் பேசப்பட்ட குற்றச்சாட்டுகள்தான். இதற்கு பா.ஜ.க. தலைமையால் மறுப்பு தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுகள் தான் இவை. இப்- போது முதன்முதலாக நீதிமன்றத்தின் விசாரணைக்குள் வந்துள்ளன.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,“எங்களுக்கு யார் நன்கொடைகள் வழங்கியது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று சொன்னவர் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.

"நன்கொடையை யார் வழங்கியுள்ளனர் என்பது அதனைப் பெறும் கட்சிக்குமட்டுமே தெரியும். மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் ரகசியம் காப்பதுதான் இந்த திட்டம்” என்று குறிப்பிட்டார். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.சந்திரசூட் தலைமையி- லான அமர்வு, ”அப்படியானால் வாக்காளர்களின் உரிமை என்ன? ஏன் நன்கொடை விபரங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.

“பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கக் கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் தேவை” என்று சொன்னவரும் சொலிட்டர் ஜெனரல்தான். மக்களைப் பற்றிக் கவலைப்பபடாத எதேச்சதிகாரம் கொண்டவர்கள் அல்லவா பா.ஜ.க.வினர்?

'என்னிடம் பணமில்லை, அதனால் தேர்தலில் நிற்கவில்லை' என்று பஞ்சப்பாட்டு பாடிய நிர்மலா அம்மையார், இப்போது நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள்ளே வந்துள்ளார்.

“கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாங்கள் ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தோம். அந்த வழிதான் தேர்தல் பத்திரங்கள். இது முழுமையான தீர்வு என்று சொல்லவில்லை. எந்த அமைப்பும் 100 சதவிகிதம் சரியானது அல்ல. அதில் இருக்கும் குறைகளை மேம்- படுத்த முடியும். எனது அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம், கருப்புப் பணத்தை எதிர்த்துப் போராடியது. ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்யைப் பரப்புகிறார்கள்” என்று 16.4.2024 அன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னவர் பிரதமர் மோடி அவர்கள்.

'தேர்தல் பத்திரங்களை ரத்து செய்ய வைத்தவர்கள் பின்னர் வருத்தப்படுவார்கள்' என்று வருத்தப்பட்டுச் சொன்னதும் அவர் தான். இப்போது நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும் நெருக்கடிக்கு பா.ஜ.க. தலைமை வந்துள்ளது. வாருங்கள், உங்கள் பதிலைச் சொல்லுங்கள் கேட்போம்!

Also Read: புதிய அமைச்சர்களுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் : எப்போது? - விவரம் உள்ளே!