murasoli thalayangam

சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்கள்... தினமலருக்கும் பழனிசாமிக்கும் முரசொலி சாட்டையடி !

சதிகாரர்கள் பெருகிவிட்டார்கள்!

'கேள்விக்குறியாகிவிட்டது தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்' என்று தலைப்புச் செய்தி வெளியிட்டு இருக்கிறது 'தினமலர்' நாளேடு! சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெடவில்லையே? எப்படிக் கெடுக்கலாம்?' என்று சதி செய்வோர் பெருகிவிட்டார்கள்!

'தினமலர்' தலைப்புச் செய்தியைப் போட்டதும், 'தூத்துக்குடி 13 கொலை' பழனிசாமி அறிக்கை விடுகிறார். இன்னும் சில நாட்களில் கிண்டிக்காரர் டுவிட் போடுவார். இவை எல்லாம் சதிச்செயலின் 'சைக்ளிங்' ஆகும். இதனை தமிழ்நாடு அறியாமல் இல்லை. புரியாமல் இல்லை.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களைத் தொகுத்து மொத்தமாக 6 பேர் படுகொலை செய்யப்பட்டதைப் போல தலைப்புச் செய்தி போடுகிறது 'தினமலர்'. அதற்குக் கீழே, 'கேள்விக்குறியாகிறது தமிழக சட்டம் -ஒழுங்கு நிலவரம்' என்று தலைப்பும் போடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியருமான ஒருவரைப் பற்றி அடையாறு காவல் நிலையத்தில் அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் நிருபர், பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அதிகாலை யில் தலையை மறைத்துக் கொண்டு ஒருவர் வந்து ஆஜர் ஆனார். அதை வைத்து, 'தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகி விட்டது' என்று தலைப்புச் செய்தி போட முடியுமா?... முடியுமா?

6 பேர் படுகொலை என்பது தனித்தனி சம்பவங்கள். இதனை விளக்கி தமிழ்நாடு காவல் துறை விரிவான விளக்கத்தைச் சொல்லி இருக்கிறது. "அனைத்து சம்பவங்களும் சொத்து தகராறு, உறவினர்களுக்கு இடையே முன் விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடைபெற்றுள்ளன. சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல" என்று விளக்கம் அளித்துள்ளது காவல் துறை. இச்சம்பவங்கள் நடைபெற்ற அன்றைய தினமே அனைத்து சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றம் சாட்டப்படுவோர் கைது செய்யப்பட்டு விட்டார்கள். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு விட்டார்கள். "வீண் விளம்பரத்துக்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்ததல்ல" என்றும் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது. தனிப்பட்ட குற்றங்களுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் வித்தியாசம் தெரியாமல், அல்- லது தெரிந்தே செய்தி வெளியிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் பத்திரிக்கா தர்மம் தான் கேள்விக்குறியாகி உள்ளது.

இதைப் பார்த்ததும், 'கிடைச்சது ஒரு மேட்டர்' என்று விழுந்து புரளத் தொடங்கிவிட்டார் 'தூத்துக்குடி 13 கொலை' பழனிசாமி. அமைதியாக ஊர்வலம் போனவர்களை சுடச் சொல்லி விட்டு, டி.வி.யில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் இந்த பழனிசாமி.

தூத்துக்குடி சம்பவம் பற்றி அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பழனிசாமிக்குத் தெரிந்தேதான் அந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாக அந்த ஆணையமே சொல்லி இருக்கிறது. அறிக்கையின் 2 ஆவது பாகம் - 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது:

".....have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate - the Commission would opine" என்று சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை.

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி யில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.

எனவே, ஊடகங்கள் மூலமாகத் தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்" -என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. இந்த ரத்தக்கறைச் சட்டையை 'கொடநாட்டில்' மறைத்துவிட்டுத்தான் இப்போது 'சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது' என்று சதிச் செயல்களில் இறங்கி இருக்கிறார்.

அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் குவிவதும், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வாழ் தமிழர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விண்ணதிர வரவேற்பு வாழ்த்து தெரிவித்ததும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'காந்தாரியைப்' போல அடிவயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள்.

Also Read: சிகாகோவில் முதலமைச்சர் : “உலகத்தின் குரலாக அமைந்த முதலமைச்சரின் உரை” - முரசொலி புகழாரம் !