murasoli thalayangam

நாட்டின் பிரதமரா அல்லது மெட்ரோ திட்டத்தின் சேர்மனா? : விடியல் பயணத்தை முடக்கும் மோடிக்கு முரசொலி கண்டனம்!

மகளிர் வளர்ச்சியா? மெட்ரோ வளர்ச்சியா?

இப்படி எல்லாம் ஒருவரால் பேச முடியுமா? இப்படி எல்லாமா ஒருவர் சிந்திப்பார்? என்று அதிர்ச்சி அடையும் அளவுக்கு பேசி வருகிறார் பிரதமர். கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தையே கொச்சைப்படுத்தி இருக்கிறார் பிரதமர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள் இலவச பயணம் என அறிவிக்கிறார்கள், இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை. எனவே மெட்ரோ திட்டங்களால் பயனில்லை என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

இவர் இந்திய நாட்டின் பிரதமரா? அல்லது மெட்ரோ திட்டத்தின் சேர்மனா? என்றே சந்தேகமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலமாக எவ்வளவு நிதி திரட்டலாம் என்ற நோக்கம் மட்டும்தான் அவருக்கு இருக்கிறதே தவிர, கட்டணமில்லா பேருந்து பயணத்தின் மூலமாக பெண்கள் அடையும் சமூக - பொருளாதார வளர்ச்சியை அவரால் சிந்திக்க முடியவில்லை. மகளிர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வருகின்ற தன்னம்பிக்கையையும், தன் அதிகாரத்தையும் அவரால் சிந்திக்க முடியவில்லை.

மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்ற உன்னதமான திட்டத்துக்கான உத்தரவை, தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அறிவித்தார் "திராவிட மாடல்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்கு "விடியல் பயணம்" என்றும் பெயர் சூட்டினார் முதலமைச்சர். இதைத்தான் கிண்டல் அடித்துள்ளார் பிரதமர். விடியல் பயணத்திட்டத்தின் உண்மையான நோக்கம் அறியாமல் "மெட்ரோ சேர்மன்" மனோபாவத்தில் பேசி இருக்கிறார்.

பிரதமருக்கு மிகச் சரியான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார், பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மெட்ரோ ரயில்கள் மூலமாக பயணிப்பவர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது என்பதைச் சொல்கிறது முதலமைச்சரின் அறிக்கை. இன்றைக்கு மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகை தந்து விடியல் பயணத்தைக் கொடுத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை என்றால், மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததும் அவரின் சாதனையே ஆகும்.

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஒரு நீண்டகால தீர்வாக 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் அமைப்பதென, 2006-ம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். இதில் 24. கி.மீ. தூரத்திற்கு சுரங்க பாதையும், 21 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் பாதையும் அடங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக "சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்" என்கிற சிறப்புவகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3.12.2007 அன்று பதிவு செய்தது.

அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினும், அதிகாரிகளும் 7.2.2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்றார்கள் என்று முரசொலி தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2.11.2008 அன்று ஒன்றிய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்தானது. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி 41 சதவிகிதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி 59 சதவிகிதம் என்று அந்த திட்டம் உருவானது.

இன்றைக்கு சென்னை மக்கள் மெட்ரோ ரயிலிலும் பயணிக்கக் காரணமும் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இரண்டாம் கட்டப் பணிகளுக்கான முழு முயற்சிகளையும் எடுத்து வருவதும் முதலமைச்சர்தான். மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் அது முடக்கப்பட்டுள்ளது. பலமுறை பிரதமரிடம் இதுபற்றி முதலமைச்சர் வலியுறுதினார். ஆனாலும் பயனில்லை. மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் 50-க்கு 50 விழுக்காடு பங்கிட்டுத் தர வேண்டும்.

இந்த திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கான ஒப்புதல் இன்று வரை தரவில்லை. மாநில அரசு செலவு செய்வதற்கான நிதியைத் திரட்ட பன்னாட்டு கடனுதவி பெறுவதற்கும் அனுமதி தரவில்லை. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. ஒன்றிய நிதி வரவில்லை என்றால், இந்தத் திட்டத்தை முழுமையாக மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடியை இதற்காக ஒதுக்கினால்தான் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி முடிக்க முடியும்.

இந்த நிலையில்தான் பிரதமரின் பேச்சு அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. "மெட்ரோவில் கூட்டம் வராது" என்பதால்தான் அவர் தமிழ்நாட்டுக்கு நிதி தரவில்லை போலும். அவர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி பார்க்கட்டும். சர்வே எடுத்து பார்க்கட்டும். புள்ளிவிபரங்களை வாங்கிப் பார்க்கட்டும். பேருந்தாக இருந்தாலும் மெட்ரோ ரயிலாக இருந்தாலும். அது மக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறதே தவிர, அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அல்ல என்பதை பிரதமர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

- முரசொலி தலையங்கம்.

Also Read: ”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!