M K Stalin

மூன்றாவது நாளாக ஆய்வுப்பணியில் முதலமைச்சர்! : தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. முதலமைச்சர், தொடர்மழை பெய்து வந்த நிலையில் 15.10.2024 அன்று வட சென்னை பகுதிகளிலும், நேற்று (16.10.2024) தென் சென்னை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சர் அவர்கள். எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

வீனஸ் நகரில் மழைநீர் வெளியேற்றும் நிலையம் அதனைத் தொடர்ந்து, இன்று (17.10.2024) மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களிடம் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். ரெட்டேரியை மேம்படுத்தும் பணி நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பாலாஜி நகர் - மருத்துவ முகாம் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்திடும் பொருட்டு பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குமரன் நகர் சாலையில் உள்ள பாலாஜி நகரில் மருத்துவ முகாமினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இம்முகாமில் 12 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு முட்டை, ரொட்டி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். தணிகாச்சலம் கால்வாய் தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் சென்னை, பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள், என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் டாக்டர் எட்வின் ராஜ்குமார் அவர்களிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் முதலமைச்சர் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள், அரிசி, ரெயின் கோட், புடவை, பெட்ஷீட் (போர்வை), ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த்தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவினை முதலமைச்சர் அன்புடன் பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார்.

Also Read: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த வழக்கு விரைவில் விசாரணை - உச்சநீதிமன்றம் உறுதி !