M K Stalin

“ஒன்றிய அமைச்சர் கையாண்டவிதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று!” : அன்னபூர்ணா விவகாரத்திற்கு முதலமைச்சர் கண்டனம்!

தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) காலை சென்னை திரும்பினார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி தொடர்பான குறைகேட்பு கூட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு கடினமாக இருக்கும் என்று பேசிய அன்னபூர்ணாவின் உரிமையாளரை, அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறாரே? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்னபூர்ணா சீனிவாசன் முன் வைத்தார் என்பதற்காக அதனை ஒன்றிய அமைச்சர் கையாண்டவிதம் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

ஏற்கனவே, அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தேசிய அளவில் கண்டங்கள் வலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, புதிய கல்விக்கொள்கை திணிப்பு குறித்தும், மெட்ரோ நிதி வழங்காமை குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “மெட்ரோ இரயில் திட்டத்திற்கும், பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கு புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்வது குறித்தும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமர் இடத்தில் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடையளித்தார்.

Also Read: ரூ. 7,616 கோடி முதலீடு - 11,516 வேலைவாய்ப்புகள்! : அமெரிக்க அரசுமுறைப் பயணம் குறித்து முதலமைச்சர் பேட்டி!