M K Stalin

“தமிழை ‘தமிழே!’ என்றழைப்பதில் தான் பெருமகிழ்ச்சி!” : சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்!

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் முயற்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும், குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, பல்வேறு நாடுகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளை அடுத்து, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் வகையில், அமெரிக்க வாழ் தமிழர்களால் மாபெரும் விழா முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்விழா, மிகச்சிறப்பாக இருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வையே தருகிறது.

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று, அதன் பிறகு lateஆக அமெரிக்கா வந்திருக்கிறேன். எனினும், அமெரிக்க தமிழ் மக்களின் வரவேற்பு latest ஆக இருக்கிறது.

நாம் எல்லாம் தனித்தனி தாய் உடைய வயிற்றில் பிறந்திருந்தாலும், நம் எல்லோருக்கும் உணர்வை, அன்பை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார். அவர் தான் ‘தமிழ்த்தாய்!’

உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, உடையவள் பொதுநலமே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழரச சுவையே, மரகத மணியே, மாணிக்க சுடரே, மன்பத விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்க தோன்றுகிறது. எனினும், தமிழை தமிழே! என்று அழைப்பதில் இருக்கிற பெருமகிழ்ச்சி, வேறெதிலும் கிடையாது” என்று பெருமிதம் கொண்டார்.

Also Read: உடல் உறுப்பு தானம் : “இந்தியாவிற்கே முன்னோடி தமிழ்நாடு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!