M K Stalin

”தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரத் திருநாள் விழாப் பேருரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திரத் திருநாள் விழாப் பேருரை:-

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!-​என்ற தேசியக்கவி பாரதியின் பாடல் வரிகளைப் பாடும் தகுதியை நமக்குத் தந்த இந்திய நாட்டு விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலையைப் பாடுபட்டுப் பெற்றுக் கொடுத்த தியாகிகளைப் போற்றுவோம். அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவிப்போம். எந்த நோக்கத்துக்காக அவர்கள் போராடினார்களோ, அந்த நோக்கம் நிறைவேற எந்நாளும் உழைப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.

இந்த விடுதலை எளிதாக கிடைத்த விடுதலை அல்ல. முந்நூறு ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பின்பு கிடைத்த சுதந்திரம் இது. இரத்தத்தையே வியர்வையாகத் தந்து, தங்கள் உடலையே விடுதலை உலைக்களத்துக்கு உணவாகத் தந்த எண்ணற்ற தியாகிகள் நம் இந்திய மண்ணில் உண்டு.

அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி, வெளிநாடுகளின் உதவியையும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படை நடத்தியபோது, கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள். விடுதலையை அடைய கால நிர்ணயம் இல்லை என்று தெரிந்தும், உயிரையே ஈந்த மாவீரர்கள் வாழ்ந்த மண், இந்தத் தமிழ் மண். அறவழியில், எதிரியைப் பணிய வைத்த அண்ணல் காந்தியடிகளின் பின்னால் முழு மனதோடு இந்தியா அணிவகுத்தது. அதிலும் தமிழ்நாடு முழுமையாகக் கை கோர்த்து நின்றது.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”

- என்று நாமக்கல் கவிஞர் பாடிய பாடல் வரிகளுக்கு ஏற்ப சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அணிவகுத்தவர்கள் தமிழ்நாட்டுத் தியாகிகள்.

இவர்களின் தியாகத்தால்தான், 1947 ஆகஸ்ட்15-ஆம் நாள் விடுதலைக் காற்றைச் சுவாசித்தோம். ’நமக்கான நாடு நமதே’ என்பதை உணர்ந்தோம். நினைத்துப் பாருங்கள், 77 ஆண்டுகளைக் கடந்து விட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றின் ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமையாக உலகுக்குக் காட்டி வருகிறோம்.

ஒரு வண்ணமல்ல நமது கொடி, அது மூவண்ணக் கொடி! நமது பன்முகத்தன்மையின் அடையாளம் இந்தக் கொடி! விடுதலை நாள் என்பது, அரசியல் விடுதலை நாளாக மட்டுமல்லாமல், பண்பாட்டு விழாவாக ஒட்டுமொத்த இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 15 என்பது ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல, ஆனந்தமான இந்தியாவை அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிடும் நாளாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் திருநாளின் வெற்றிச் சின்னமாக விளங்கும் நம் தேசியக் கொடியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முகப்பில், ஓங்கி உயர்ந்து நிற்கும் கம்பத்தில் ஏற்றி வைத்துப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ளோம். விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை

50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர், நம் நெஞ்சங்களில் என்றென்றும் நீக்கமற வீற்றிருக்கும் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான்! மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதற்கான போராட்டம்! முத்தமிழறிஞர் கலைஞர் அன்று பெற்றுத்தந்த உரிமையின்படி, அவரது நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில், இன்று நானும், நான்காவது ஆண்டாக சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன். இந்த அருமையான வாய்ப்பை தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கொடியேற்றும் வாய்ப்பை எனக்குத் தந்த எனதருமைத் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குரியவன் ஆவேன்.

நம் நாட்டில் விடுதலைக்காக 300 ஆண்டுகளாய் நிகழ்ந்த நெடிய போராட்டங்களில் இன்னுயிர்களை ஈந்தும், உடல் உறுப்புகளை இழந்தும், சொத்து சுகங்கள், மனைவி மக்கள் அனைத்தையும் பறிகொடுத்தும், நம் நாட்டின் விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்த வீரதீரத் தியாக வேங்கைகள் அனைவருக்கும் நம்முடைய நன்றிகளைத் தெரிவிக்கும் அடையாளமாக வீர வணக்கம் செலுத்திடுவோம்! இன்று மட்டுமல்ல; என்றைக்கும் அந்த வீரத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் சிலைகள், மணிமண்டபங்கள் என நினைவுச் சின்னங்கள் அமைத்துப் போற்றி வருகிறோம்.

2021-இல் எனது தலைமையில் அமைந்திருக்கிற உங்கள் திராவிட மாடல் ஆட்சியில்;

* கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாருக்குக் கோயம்புத்தூரில் திருவுருவச்சிலை:

* விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை;

* நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு நாமக்கல் நகரில் சிலை;

* திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மணிமண்டபம்;

* குடியாத்தத்தில் விடுதலைப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குத் திருவுருவச் சிலை

* தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் அவர்கள் மணிமண்டபத்தில் புதிய சிலைகள் - ஆகியவற்றை அமைத்துத் திறந்து வைத்துள்ளேன்.

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் அமைக்கும் பணிகள்;

* பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்குத் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள்;

* வீராங்கனை குயிலி அவர்களுக்குச் சிவகங்கையில் திருவுருவச் சிலை நிறுவும் பணிகள்;

* விடுதலைப் போராட்ட வீரர் “வாளுக்குவேலி அம்பலம்” அவர்களுக்குச் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச் சிலை நிறுவும் பணிகள்;

* தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திடும் பணிகள்

- ஆகியவை நடைபெற்று வருகின்றன. இப்படி, எந்த மாநிலமும் செய்யாத முறையில் அனைத்துத் தியாகிகளையும் போற்றி வருகிறது தமிழ்நாடு. அந்தத் தியாகிகளின் கனவையும் நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

“திராவிட மாடல் என்றால் என்ன?” என்று கேட்பவர்களுக்கு நான் பல முறை விளக்கமளித்திருந்தாலும், அதனை மீண்டும் ஒருமுறை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.

அதிலும், மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களைச் சொல்ல வேண்டுமென்றால்,

* பெண்களின் சமூகப் பங்களிப்பையும், பொருளாதார விடுதலையையும் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் திட்டம்தான் பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி அளிக்கும் விடியல் பயணம் திட்டம்.

* அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி பெண்கல்வியைப் போற்றும் திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம்.

* சமூகத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

அடுத்து, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை எடுத்துக் கொண்டால், நமது திராவிட மாடல் அரசு இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக உருவாக்கிய, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’. இந்தத் திட்டத்தால் 20 இலட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் தினமும் சூடான – சுவையான உணவை உண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுமாதிரியான திட்டங்களால் இன்று நம் தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைச் சொல்ல வேண்டுமென்றால்,

* ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு அவர்களது வீட்டைத் தேடிச் சென்று உயர்தர மருத்துவத்தை வழங்கிவரும், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்!

* எண்ணற்ற உயிர்களையும் – குடும்பங்களையும் காப்பாற்றும் மகத்தான திட்டமான ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டம்!

* இளைஞர்களது எதிர்காலத்துக்கு உதவும் திட்டங்களைச் சொல்ல வேண்டுமென்றால்,

* தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் கல்வியால், அறிவால், ஆற்றலால், தனித்திறமையால் 'நான் முதல்வன்' என்று தலைநிமிர்ந்து சொல்ல வைக்கும், எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான “நான் முதல்வன்” திட்டம்!

* உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களை வழங்கும், கல்லூரிக் கனவு திட்டம்!

அதே போல், இந்த நிதியாண்டு “புதுமைப்பெண்” திட்டத்தைப் போன்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன்.

நமது தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வி பல பயின்று வாழ்வில் சிறக்கவேண்டும் என்பதே என் கனவு. அதற்காகத்தான் உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறேன்.

நமது மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று, வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஓர் அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். அதில்தான் எனது மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

அதற்கு எடுத்துக்காட்டுதான், ஒன்றிய அரசின் தரவுகளின்படி வெளியான ஒரு புள்ளிவிவரம். அதில். அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் 77 இலட்சத்து 79 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உங்கள் திராவிட மாடல் அரசால் உருவாகியுள்ளன.

அதுமட்டுமல்ல, இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு வாரியங்கள் மூலமாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்லாமல், வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 16 மாதங்களுக்குள் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற இருக்கிறது என்பதையும் ஏற்கெனவே நான் அறிவித்திருக்கிறேன்.

அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதையும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு தொழிற்துறையில் புதிய பாய்ச்சலைக் கண்டுவருகிறது.

அதற்கு அடையாளமாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்” முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. இதன் மூலம், 14 இலட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 இலட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.

தமிழ்நாட்டைத் தொழில்வளம் நிறைந்த, வளமான மாநிலமாக வளர்த்தெடுக்க, தொழிற்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். அவற்றில் முக்கியமானவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால்,

* எறையூரில் தொழில்பூங்கா

* சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் “நிதிநுட்ப நகரம்”

* திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்

* விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் “மினி டைடல் பூங்காக்கள்”

* ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையம்

* திருவள்ளூர் மாவட்டத்தில், 182 ஏக்கர் நிலப்பரப்பில் 1,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா

* கோயம்புத்தூர் மாவட்டத்தில், சுமார் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா

* தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இயங்கும் இஸ்ரோ விண்வெளி நிலையத்திற்கு அருகில் ஒரு விண்வெளி தொழிற் பூங்கா மற்றும் திட எரிபொருள் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும், எட்டு கோடி மக்களையும் சென்றடைகிற, `எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமூகநீதி அடிப்படையிலான, வளர்ச்சித் திட்டங்களாகத் திகழ்கின்றன.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது.

நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக, இந்த வீர விடுதலைத் திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

* அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும், தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.

* தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.

* அடுத்ததாக, தியாகிகள் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை இப்போது மகிழ்ச்சியோடு வெளியிட விரும்புகிறேன்.

* மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி,

வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கூட, நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம்.

தமிழ்நாட்டிலும், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநிலப் பகுதிகள் அதிகம் உள்ளன. அங்குப் பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்தப் பரிந்துரைகளின் மீது, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் தினமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

இந்தியாவுக்கு வழிகாட்டியாக, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் வழித்தோன்றல் மட்டுமல்ல; அவர்கள் நினைத்த செயலைச் செய்து காட்டும் வழிவழித் தொடர்ச்சியாக நான் செயல்பட்டு வருகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு அளித்து வரும் வெற்றியின் மூலமாக தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன்.

தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. இந்திய நாடு இன்னல்களை வென்ற நாடு மட்டுமல்ல, உலகுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டிய நாடு. அத்தகைய இந்திய நாட்டின் பொறுப்புமிக்க குடிமக்களாகிய நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி: “நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்!”; “நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்!”.

தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களில் ஒருவனாக - இந்திய நாட்டு மக்களுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக - எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

Also Read: 78-ஆவது சுதந்திர தினம் : கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!