M K Stalin

3% உள்ஒதுக்கீடு தீர்ப்பு : “திராவிட மாடல் பயணத்தில் மற்றுமோர் அங்கீகாரம்” - முதலமைச்சர் நெகிழ்ச்சி !

நாட்டில் தற்போது சமூக ரீதியாக இடஒதுக்கீடு முறை வருகிறது. பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் ஏற்கனெவே உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு, பட்டியலின இட ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு என்று 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது கலைஞருக்கு உடல்நிலை பிரச்னை காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், ஒரு கடிதம் மூலம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி, சட்டப்பேரவையில் வாசித்தார்.

இதையடுத்து அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும் ஆந்திராவில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கடந்த 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநில வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்த சூழலில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 1) இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது பட்டியல் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்றும், உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளில், பேலா திரிவேதி என்ற ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்த நிலையில், மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

மேலும், பட்டியல், பழங்குடியினர் எதிர்கொள்ளும் பாகுபாடு காரணமாக அவர்களால் இலகுவாக முன்னிலைக்கு வர முடியவில்லை என்றும், அதனை சரி செய்யும் வகையில், அரசியல் சாசன பிரிவு 14 துணை வகைப்பாட்டை அனுமதிக்கிறது என்றும், SC,ST பிரிவினருக்கு கிரீமி லேயரில் (Creamy layer ) இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருந்ததியின் உள் இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தற்போது அனைவரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

Also Read: குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது : சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!