M K Stalin

“இப்படி அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப் போவீர்கள்!” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை !

2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தயா கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாரபட்சத்துடன் நடந்துகொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், ஜூலை 27 ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (ஜூலை 24) நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து ஒன்றிய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் 2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

Also Read: பள்ளி மேலாண்மை கூட்டம் : பெற்றோர் & முன்னாள் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு !