M K Stalin

நீட் PG தேர்வு ரத்து: மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறை சவப்பெட்டியின் இறுதி ஆணிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது.

அதோடு தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் 20க்கும் அதிகமானோர் கைதாகினர். இந்த நிலையில், தேர்வு நடைபெறவிருந்த 12 மணி நேரத்துக்கு முன்னர் நீட் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் பல்வேறு மையங்களில் நடைபெறும் நிலையில், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்காக முன்னரே தேர்வு மையங்களை நோக்கி பயணத்தில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேசிய தேர்வுகள் வாரியத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

இந்த முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,

- தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி,

- பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி,

- தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து,

- அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து

சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்"என்று கூறியுள்ளார்.

Also Read: நீட் கேள்வித்தாள் கசிவு வழக்கு : முக்கிய குற்றவாளி கைது... ஏராளமான தேர்வுகளில் மோசடி செய்தது அம்பலம் !