M K Stalin

“அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கும் பா.ஜ.க. எனும் பேரழிவு, ” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அரசியல் சாசனத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அனைவரும் சமம் என்ற நோக்கில் பலரும் உறுதி ஏற்பர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2022-ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் அப்போதில் இருந்தே, அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ 'சமத்துவ நாள்'ஆக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மீண்டும் மரியாதை செய்தார். மேலும் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிலையில், அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தை பாஜக எனும் பேரழிவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது!

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்!”

Also Read: அம்பேத்கர் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு !