M K Stalin

“ஒன்றிய கவுன்சிலர் கூட வராத இடத்திற்கு நீங்க வந்திருக்கிங்க!”- சூலூர் மக்கள் நெகிழ்ச்சி

சூலூர் மக்களை சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து அக்கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர்,‘இதுவரை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட வராத எங்க தெருவுக்கு நீங்க வந்திருக்கிங்க, இது எங்கள் பாக்கியம்’ எனக் கூறினார். அதற்கு புன்னகையுடன் பதிலளித்த ஸ்டாலின், உங்களுக்கு அதிசயமாய் இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி இல்லை என்றார்.

இதற்குக் காரணம், நான் உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் சென்னை மேயர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தபோது, 5 வருடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களையும் குறைந்தது 5 அல்லது 6 முறை சந்தித்து குறைகளை விசாரிப்பது வழக்கம். அதுமட்டுமல்லாமல் உதவித் தொகைகளை 5 ஆயிரம் பேர் இருந்தாலும் கூட, எந்தத் தவறும் நடக்காமல் அந்தத் தொகை ஏழைப் பெண்கள் அனைவருக்கும் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக எத்தனை மணிநேரம் ஆனாலும் தானே இருந்து கொடுத்துவிட்டு வருவேன் எனக் கூறினார்.

சூலூர் மக்களிடம் தொடர்ந்து பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், அந்த தொகுதி வேட்பாளரைச் சுட்டிக்காட்டி, “இவரே எம்.எல்.ஏ ஆனாலும் மக்களை சந்திக்க அடிக்கடி வரலன்னா, இவரை பதவியிலிருந்து தூக்கிடுவோம்” என உறுதியோடு சொன்னார். அதைக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி, நீங்கள் கட்சியைக் கடந்து எங்களுக்குச் சொந்தமாகி விட்டீர்கள், நிச்சயமாக நீங்கள் தான் எங்க மக்களுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என மீண்டும் நெகிழ்ச்சியோடு கூறினார்.