jallikattu

களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்த காளைகள்.. வெற்றிபெறுபவர்களுக்கு கொட்டும் பரிசுகள் !

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில் இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில்,100 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

முதல் சுற்றில் தேனி மாவட்டம் சீலையம்பட்டி முத்துகிருஷ்ணன் 6 காளைகள் அடக்கி முதல் இடத்தை பெற்றார். இரண்டாம் இடத்தில், 4 காளைகளை அடக்கி அவனியாபுரம் மணி மற்றும் திருப்பதி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றுப்போட்டிகளில், அவனியாபுரம் கார்த்திக் 6 காளைகள் அடக்கி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே போல அவனியாபுரம் ரஞ்சித்குமார் 6 காளைகள் பிடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

Also Read: தை பொங்கல் பண்டிகை : “வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழா...” - முரசொலி தலையங்கம் !