India

போலி காவல் நிலையம், போலி டோல் கேட் வரிசையில் போலி நீதிமன்றம் : உலகமே வியக்கும் குஜராத் மாடல்!

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37) என்பவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று கூறி ஏராளமான வழக்குகளையும் விசாரித்து வந்துள்ளார்.

பொதுமக்களும் இது உண்மையான நீதிமன்றம் என கருதி இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த நீதிமன்றத்தில் பல நூறு வழக்குகளுக்கு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரரிடமிருந்து பெரிய தொகை ஒன்றை லஞ்சமாக பெற்ற மோரிஸ் சாமுவேல், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பின்னர் அந்த தீர்ப்பின் நகலை பாபுஜி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அப்போது இந்த தீர்ப்பு நகலில் சந்தேகமடைந்த நீதிபதி, இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோரிஸ் சாமுவேல் போலி நீதிமன்றத்தையே நடத்தியது அம்பலமானது. மேலும் கடந்த 5 ஆண்டாக இந்த நீதிமன்றம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னர் போலி காவல் நிலையம், போலி டோல் கேட் ஆகியவையும் குஜராத்தில் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சென்னை மழையின்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எங்கே இருந்தார் ? - அமைச்சர் சேகர் பாபு கேள்வி !