India

வயநாடு நிலச்சரிவுக்கு இன்னும் நிதி வழங்காத ஒன்றிய அரசு : சட்டப்பேரவையில் பினராய் விஜயன் குற்றச்சாட்டு!

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜுலை 30 அன்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர்.

இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது. ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் திருஓணம் விழா, 2024-ல் அரசு விழாவாக முன்னெடுக்கப்படாது என கேரள அரசு அறிவித்தது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டார். பிரதமர் மோடி, நிலச்சரிவு ஏற்பட்டு பகுதியளவிற்கும் மேல் மீட்புப்பணிகள் நிறைவுற்ற பின், ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பேரிடர் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவுக்கு இன்னும் ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன்," வயநாடு பேரிடருக்கு நிவாரணம் கோரி ஒன்றிய அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. வயநாடு பேரிடருக்கு பிறகு, மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணங்களை வழங்கி உள்ளது. ஆனால் கேரளாவுக்கு வழங்கவில்லை.

ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் மேலாண்மை நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அது பேரிடர் நடந்தாலும் இல்லாவிட்டாலும் மாநிலங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தொகை மட்டுமே. வயநாடு பேரிடருக்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே மீண்டும் ஒன்றிய அரசை அணுக அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: 2-ம் கட்ட மெட்ரோ திட்டம் : “பணத்தை கொடுக்காமல் இருப்பதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா?”