India

திருப்பதி லட்டு விவகாரம் : 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி லட்டில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து லட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முந்தைய விசாரணையின் போது, “திருப்பதி லட்டு சர்ச்சையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் ஏன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பத்திரிகையாளர் சந்திப்பில் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் ?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும்,லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு எடுக்க வழக்கு 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்டு விவகாரத்தில் 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநரின் மேற்பார்வையில் இயங்கவிருக்கும் இக்குழுவில் சிபிஐயை சேர்ந்த இருவரும் ஆந்திரா போலீஸை சேர்ந்த இருவரும் உணவு தர நிர்ணய வாரியம் சார்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர்.

மேலும், ”திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியல் போர்க்களமாக தொடர அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Also Read: கீழடி அகழாய்வு தளம் ஆவணம்! : ஹெலிகாம் டிரோனில் பதிவு செய்யும் பணி தொடக்கம்!