India

3 ஆண்டுகள் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு ரூ.2 கோடியே 99 லட்சம் செலவு : RTI மூலம் தகவல்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார். பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

பின்னர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் அசோக் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநராக இருந்தபோது அவருக்கு செலவிட்ட தொகை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரி செந்தில்குமார் அந்த மனுவிற்கு பதில் தந்துள்ளார்.

அதன்படி, துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து, உணவு, மளிகை, எரிவாயு உட்பட 2021-22 ல் ரூ. 90.86 லட்சமும், 2022-23 ல் ரூ.54.19 லட்சமும், 2023-24ல் ரூ.91.59 லட்சமும் செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,துணைநிலை ஆளுநர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு 2021- 22ல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக ரூ.30.71 லட்சமும், 2022-23ல் ரூ.21.19 லட்சமும்,2023 -24ல் ரூ. 10. 95 லட்சமும் செலவாகி உள்ளது கூறுப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு வந்த பரிசு பொருட்கள் குறித்து எந்த தகவலும் கூறவில்லை. அவரின் விமான செலவுக்கு இந்தச் செயலகம் ரூ. 21,324 செலவு செய்துள்ளதாகவும், அவரின் பிற விமான பயணங்களின் செலவுகளை தெலுங்கானா மாநில அரசு ஏற்றுள்ளது என்றும், மொத்தமாக கடந்த 2021- 22 ல் ஒரு கோடியே 21 லட்சமும், 2022-23 ல் ரூ. 75 லட்சத்து 38 ஆயிரம், 2023- 24 ல் ஒரு கோடியே 2 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.