India

வெளிநாடு வாழ் இந்தியர்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும்! : மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு உத்தரவு!

தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், வியட்நாம் நாடுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு சென்றவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு.

இந்த நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் சைபர் மோசடி பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.

2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 73,138 பணிக்கு சென்றுள்ளனர். அதில் 29,466 பேர் இன்னும் நாடு திருப்பவில்லை. இதில் அதிகமாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3,667 பேர் உள்ளனர்.

மகாராஷ்டிராவிலிருந்து 3,233 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 3,124 பேரும் சென்றுள்ளதாக ஒன்றிய அரசின் கணக்குகள் தெரிவிக்கின்றன. இதில் அதிகமானோர் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் சைபர் கொத்தடிமைகளாக சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து வெளியுறவுத்துறை, உள்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை நடத்தினர். அதன் பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read: பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!